செவ்வாய், 26 ஜூலை, 2011

நாத்திக மதம்

கடவுள் படைக்கப்பட்ட போதே நாத்திகன் பிறந்து விட்டான் 

யுகயுகமாய் அவதாரமெடுத்தபோதும்
நாத்திகத்தை அழிக்கவில்லை 
ராமனும் மரியாதையாக 
நாத்திக அந்தணன் என்றான் 

ராமன் காட்டில் வாடும்போது 
நாட்டில் நாத்திகன் வாழ்ந்திருந்தான் 
ராமன் கடவுள் ஆகும்முன்னே 
கடவுள் இல்லை என்றிருந்தான் 

நானும் கூட சில காலம் 
நாத்திகனாய் வாழ்ந்திருந்தும் 
அடையாள சட்டை போட்டு 
அலைந்ததில்லை ஊருக்குள்ளே 

பிறமொழி நாத்திகர்கள் 
பற்றி எனக்கேதும் தெரியாது 
நம்மூரு நாத்திகர்களுடன் 
நல்ல பழக்கமுண்டு 

நாத்திகம் என்றொரு மதமுண்டு 

ஆத்திகனாய் பிறந்துபின் 
நாத்திகனாய் சிலகாலமேனும் 
வாழாதிருப்பவன் பெற்றோரால் 
மூளைசலவையாகி சிந்தியாதவனே 

நாத்திகனாய் பிறந்துபின் 
ஆத்திகனாய் சிலகாலமேனும் 
வாழாதிருப்பவன் பெற்றோரால் 
மூளைசலவையாகி சிந்தியாதவனே 

மத அடையாளம் காட்டும்வண்ணம் 
வண்ண ஆடை உடுத்துவார்கள் 
ராமஜெயம் போல இறந்த தலைவர் 
வாழ்கவென்று கூவி கூடுவார்கள் 

நாத்திக மதத்தில் குருக்களுண்டு மடங்களுண்டு 

உருவாக்கிய தலைவருடன் கூட 
அடுத்த நிலை தலைவர்களையும் 
இருந்தாலும் இறந்தாலும் 
மாலையிட்டு வணங்கிடுவர் 

பிறந்த இறந்த நாள்பார்த்து 
கூட்டம் கூடி ஊர்வலம் போய்
ஊரூராய் திருவிழா நடத்தி 
பக்தரெல்லாம் மகிழ்ந்திருப்பார் 

ஊரூருக்கு மடங்களுண்டு 
ஒவ்வொன்றுக்கும் தலைவருண்டு 
அங்கங்கு சொத்துண்டு வசூலுண்டு
வீணாய் போகும் பக்தருண்டு 

திருமணம் நடத்திவைக்க 
தலைவர் வந்திருந்து அர்ச்சிப்பார் 
தன்மத புனிதர்களை போற்றியும் 
பிறமத புனிதர்களை தூற்றியும் 

நாத்திக மதத்தில் சாதியுண்டு மதமுமுண்டு 

நாத்திக மதத்திலும் 
சாதிசெத்து போவதில்லை
நாத்திக நாக்குகள் 
சாதி சொல்லா நாளுமில்லை 

நாத்திக மதத்திலும் 
உட்பிரிவுகள் பல உண்டு
உட்பிரிவுகளுக்குள் நித்தம் 
சண்டைகளும் வருவதுண்டு 

நாத்திக மதத்திலும் 
தலைவர் சொன்னது வேதமாகும்
அதை அறிந்தால் போதும்  
அனைத்தும் அறிந்தாற்போல் பேசித்திரிவதுண்டு

நாத்திக மதத்திலும் 
மதத் தீவிரவாதமுண்டு 
பிறரை எதிரியென நாவால் தாக்கிடுவர் 
கூட்டம் கூடி உடலாலும் தாக்கிடுவர்