நான் காதல் ஜுரம் வந்து தவிக்கையிலே
நெற்றி தொட்ட நண்பரெல்லாம் நகைக்கையிலே
நெஞ்சு தொட்ட ஒருத்தி மட்டும் நின்றாளே
அம்மா அப்பா சொன்னதெல்லாம் குற்றமாக
அவள் நினைத்து அப்பப்போ அழுகையிலே
அக்கண்ணீர் துடைக்கும் ஒரே விரலானேன்
உள்ளங்கள் இணைந்ததென எங்க எண்ணம்
உடல்பசி அலைதலென சிலர் இழிக்க
உள்ளே நொறுங்கி நெருங்கலானோம்
கூடவே இருந்து வந்த நண்பர் சிலர்
காதலுக்கு குழிபறிக்க மிரண்டு போனோம்
கடவுளே சாட்சி என கோவில் போனோம்
திருமணத்தோடு முடிய இது காதல்படமா
சீர்வரா திருமணத்தால் செலவு அச்சம்
சிலகாலம் வசதியின்றி வாழ்ந்திருந்தோம்
கல்யாணம் முடிந்தபின்னே சேரவந்த இரு
குடும்ப நடத்தையாலே கோபம் கொண்டோம்
கொண்டவரே போதுமென்று மீண்டும் போனோம்
கோபம்வரா கணவனென குறிப்பறியும் மனைவியென
கண்ணுவைச்ச போதெல்லாம் கர்வம் கொண்டோம்
குழந்தை போல வாழ்ந்து வந்தோம் உள்ளுக்குள்ளே
காதலுக்கு பரிசாய் வீட்டில் மழலையாச்சு
குழந்தையோடு குழந்தை சேர உவகையாச்சு
குடும்பம் கடமை வாழ்விலிப்போ குறியுமாச்சு
தனிமரமாய் தோன்றி வந்த வாழ்க்கையுமே
தோப்பாச்சு வீசுதிப்போ அமைதித்தேன்றல்
தொடருதிப்போ கவிதையாக எங்கள் வாழ்வு