செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

எங்கள் நவரசக் காதல் வாழ்வு


நான் காதல் ஜுரம் வந்து தவிக்கையிலே 
நெற்றி தொட்ட நண்பரெல்லாம் நகைக்கையிலே 
நெஞ்சு தொட்ட ஒருத்தி மட்டும் நின்றாளே 


அம்மா அப்பா சொன்னதெல்லாம் குற்றமாக 
அவள் நினைத்து அப்பப்போ அழுகையிலே 
அக்கண்ணீர் துடைக்கும் ஒரே விரலானேன் 


உள்ளங்கள் இணைந்ததென எங்க எண்ணம் 
உடல்பசி அலைதலென சிலர் இழிக்க 
உள்ளே நொறுங்கி நெருங்கலானோம் 


கூடவே இருந்து வந்த நண்பர் சிலர் 
காதலுக்கு குழிபறிக்க மிரண்டு போனோம் 
கடவுளே சாட்சி என கோவில் போனோம் 


திருமணத்தோடு முடிய இது காதல்படமா 
சீர்வரா திருமணத்தால் செலவு அச்சம் 
சிலகாலம் வசதியின்றி வாழ்ந்திருந்தோம் 


கல்யாணம் முடிந்தபின்னே சேரவந்த இரு 
குடும்ப நடத்தையாலே கோபம் கொண்டோம் 
கொண்டவரே போதுமென்று மீண்டும் போனோம் 


கோபம்வரா கணவனென குறிப்பறியும் மனைவியென 
கண்ணுவைச்ச போதெல்லாம் கர்வம் கொண்டோம் 
குழந்தை போல வாழ்ந்து வந்தோம் உள்ளுக்குள்ளே 


காதலுக்கு பரிசாய் வீட்டில் மழலையாச்சு 
குழந்தையோடு குழந்தை சேர உவகையாச்சு 
குடும்பம் கடமை வாழ்விலிப்போ குறியுமாச்சு 


தனிமரமாய் தோன்றி வந்த வாழ்க்கையுமே 
தோப்பாச்சு வீசுதிப்போ அமைதித்தேன்றல் 
தொடருதிப்போ கவிதையாக எங்கள் வாழ்வு

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மெரீனா கவிதைகள்

கரையில் கரையுது காகமதன்
கரைதலை கரைத்து ஓங்கும்
கரையில் மோதும் அலைகள்

மணலை தள்ளவந்த நண்டு
பயத்தில் நிற்குது உறைந்து
நகரும் என்னைப் பார்த்து

அசையாது நின்ற போதும்
நண்டு பார்க்குது பயந்து
ஆடைகளை ஆட்டுது காற்று

சிறுவர் பெண்கள் விரும்பிடும்
சதையிழந்த பிணங்கள் அழகு
சங்கு சிப்பி ஓடுகள்

எனைப் பார்த்து அலையாட
அலை பார்த்து நானாட
சிறுவயது நட்பெமக்குள்

மோகம் கொண்டு வந்தவனை
முறைக்க வைக்கும் ஏக்கப்பார்வை
முறுக்கு சுண்டல் பெட்டியுடன்

ஓய்வெடுத்து நிற்கையிலும்
ஒதுங்குவோர்க்கு உதவிடுமே
ஓரம் நிற்கும் படகுகள்

முன்னே மாதிரி இல்லையின்னு
முனகிகிட்டே இருந்தாலும்
மிளகாய் பஜ்ஜி திங்கணுமே

குழந்தையாய் கூட்டி வந்தோம்
குழந்தையாய் தான் ஆடி வந்தான்
கட்டிக் கிடந்தோரை பார்க்கும் வரை

வேடிக்கை வேறு காட்டியும்
விடாது பார்த்திருந்தான்
விரகம் கொண்ட ஜோடியினை

காதலிதுவென கொள்வானோ
குழம்புவானோவென குழம்புகையில்
காவலர் வந்தார் இவர் பிரிந்தார்

குட்டைகுதிரை பட்டம் பொம்மை
குச்சி ஐஸ் மாங்காய் பத்தை
குழந்தையாய் மீண்டும் மாற்றும்

ஒரேபொருளினை எத்தனைபேர் விற்கின்றார்
ஒரேபொருளினை எத்தனைவிதமாய் விற்கின்றார்
அத்தனை பேரிடமும் வாங்க வரும் ஆளுண்டு

ஆடைகளை மடித்துக் கட்டி
ஓடி தப்பப் பார்க்கின்றார்
அலைவென்றதும் மகிழ்கிறார்

என்ன தான் தட்டினாலும்
என்ன தான் உதறினாலும்
என்வீடு வந்துசேரும் மணல்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஆத்திகம் விற்போர்

தாத்தா படங்காட்டி தினந்தினம் மருந்துவிற்கும்
தெரியாத மருத்துவனும் தெளிவாக தெரிந்திருக்கான்
குழந்தைப் பேறுக்கும் குறைவான ஆண்மைக்கும்
குணமாக்கும் மருந்தேனவே கூவிவித்தால் கோடிவரும்
வசூலை தந்திடாத வியாதிகள் பல இருக்கும்
வியாபாரம் குறையட்டும் விரைவீக்கம் மூலமுண்டு

சொந்தப் படங்காட்டி தெம்பு விற்கும் கூட்டமுண்டு
தெரியாத மனம்மறைத் தரிதார முகங்காட்டும்
கோடீசுவரன் தொப்பையையும் குற்றவுணர்வு குப்பையையும்
களையுமிந்த பயிற்சி என்று கூறினாலே கொடியுண்டு
பெரிய ஆளு சிக்காட்டியும் பணம்பண்ண வழியுமுண்டு
பத்துப்பத்து ரூபாயா லட்சம் பேரிடம் வசூலுண்டு

பிள்ளைகள் இல்லா நேரம் பள்ளியிலே கூட்டம் போடும்
பிரசினை உள்ளவனாய் பாத்துபாத்து புடிச்சி போடும்
கடவுள் வருவான்னும் கேட்டால் பதில் சொல்லும்முன்னும்
கடவுளின் தூதனென்றும் கடவுளே தானென்றும்
பணங்கொடு கடவுளுக்கு பிள்ளை மதிப்பெண் கூடுமுன்னும்
பாவம் போகும் பணம் பெருகுன்னு சொர்க்கத்தில் இடம் விற்கும்