வியாழன், 11 ஆகஸ்ட், 2011

மெரீனா கவிதைகள்

கரையில் கரையுது காகமதன்
கரைதலை கரைத்து ஓங்கும்
கரையில் மோதும் அலைகள்

மணலை தள்ளவந்த நண்டு
பயத்தில் நிற்குது உறைந்து
நகரும் என்னைப் பார்த்து

அசையாது நின்ற போதும்
நண்டு பார்க்குது பயந்து
ஆடைகளை ஆட்டுது காற்று

சிறுவர் பெண்கள் விரும்பிடும்
சதையிழந்த பிணங்கள் அழகு
சங்கு சிப்பி ஓடுகள்

எனைப் பார்த்து அலையாட
அலை பார்த்து நானாட
சிறுவயது நட்பெமக்குள்

மோகம் கொண்டு வந்தவனை
முறைக்க வைக்கும் ஏக்கப்பார்வை
முறுக்கு சுண்டல் பெட்டியுடன்

ஓய்வெடுத்து நிற்கையிலும்
ஒதுங்குவோர்க்கு உதவிடுமே
ஓரம் நிற்கும் படகுகள்

முன்னே மாதிரி இல்லையின்னு
முனகிகிட்டே இருந்தாலும்
மிளகாய் பஜ்ஜி திங்கணுமே

குழந்தையாய் கூட்டி வந்தோம்
குழந்தையாய் தான் ஆடி வந்தான்
கட்டிக் கிடந்தோரை பார்க்கும் வரை

வேடிக்கை வேறு காட்டியும்
விடாது பார்த்திருந்தான்
விரகம் கொண்ட ஜோடியினை

காதலிதுவென கொள்வானோ
குழம்புவானோவென குழம்புகையில்
காவலர் வந்தார் இவர் பிரிந்தார்

குட்டைகுதிரை பட்டம் பொம்மை
குச்சி ஐஸ் மாங்காய் பத்தை
குழந்தையாய் மீண்டும் மாற்றும்

ஒரேபொருளினை எத்தனைபேர் விற்கின்றார்
ஒரேபொருளினை எத்தனைவிதமாய் விற்கின்றார்
அத்தனை பேரிடமும் வாங்க வரும் ஆளுண்டு

ஆடைகளை மடித்துக் கட்டி
ஓடி தப்பப் பார்க்கின்றார்
அலைவென்றதும் மகிழ்கிறார்

என்ன தான் தட்டினாலும்
என்ன தான் உதறினாலும்
என்வீடு வந்துசேரும் மணல்

கருத்துகள் இல்லை: