ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

இறைவனுடன் ஒரு மாலை

வண்டி நிறுத்த தெரியாதவனெல்லாம் 
காசிருக்குன்னு வண்டி வாங்கி 
ஓட்டிக்கிட்டும் வந்துடுறாங்க வெட்டிபசங்க 

எதுக்கு இத்தனை கடைகள் இங்க 
எல்லாம் விலை ஏத்தி விற்கும் ஏமாற்றுக்காரர்கள்  

வீட்டுகிட்ட தேங்காய் பழம் விலை கம்மி 
அங்க வாங்கி வாங்கி வர மறந்து 
இங்க வாங்கி விரயம் செய்கிறாள் அறிவுகெட்டவள்   

நுழையும் போதே கை நீட்டுறாங்க 
வந்த வேலையைவிட்டு பிச்சை போடவா முடியும் 

செருப்பைத்தான் இங்க விடுகிறேனே 
காசையும் ஏன் இப்பவே கேட்கிறான் 
அதுவும் எழுதியிருப்பதை விட அதிகமாக 

சீட்டு வாங்கி செல்லும்படி ஒரு பதாகை 
இங்கு எல்லாத்துக்கும் ஒரு விலை 

அவனுக்கு மட்டும் ஏன் மாலை போடுறான் 
எனக்கு ஒரு பூ கூட தரவில்லை 
எல்லாம் பதவியும் வசதியும் செய்யும் வேலை 

அவளை திரும்பி திரும்பி பார்த்தேன் 
அந்த சாதிக்கு மட்டும் எப்படி இப்படி அழகு 

அவள் கூட வந்தவன் ஏன் இப்படி பட்டுகிட்டே நடக்கிறான் 
அவன்கையில் இருக்கும் குழந்தை விளையாடிகிட்டே இருக்கு 
இப்படியா வளர்ப்பாங்க பெத்துக்கமட்டும்தான் தெரியும்போல 

தாயார் அலங்காரம் அருமை என்றாள் 
இதுக்கா கோவிலுக்கு வந்தாய் என்றேன் 

புறா பூனை எல்லாம் ஏன் இங்கே கொல்லாமல் விட்டாங்க 
வெளிய வரும்போது பிச்சைபோட்டால் புண்ணியம் போகுமாம் 
நிம்மதியா சாமிகும்பிட முடியுதா இங்க 

வீட்டுக்கு வந்து யோசிச்சு பார்த்தால் 
சிலையாக இறைவன் சிரித்த மாதிரி நினைவு 
என்னைப் பார்த்து சிரித்திருப்பானோ 
கோவிலுக்கு வந்தும் கடவுளை அனுபவிக்காமல் போனதற்கா 
உலகத்துக்கு வந்தும் வாழ்வை அனுபவிக்காமல் போவதற்கா 

என்னைப் பாத்து சிரிச்சா அவனேல்லாம் ஒரு  கடவுளா 
கடவுளே இல்லன்னு அறிவாளி மாதிரி ஒருத்தன் சொன்னான்

நான் எப்பவுமே சரி 

கருத்துகள் இல்லை: