வண்டி நிறுத்த தெரியாதவனெல்லாம்
காசிருக்குன்னு வண்டி வாங்கி
ஓட்டிக்கிட்டும் வந்துடுறாங்க வெட்டிபசங்க
எதுக்கு இத்தனை கடைகள் இங்க
எல்லாம் விலை ஏத்தி விற்கும் ஏமாற்றுக்காரர்கள்
வீட்டுகிட்ட தேங்காய் பழம் விலை கம்மி
அங்க வாங்கி வாங்கி வர மறந்து
இங்க வாங்கி விரயம் செய்கிறாள் அறிவுகெட்டவள்
நுழையும் போதே கை நீட்டுறாங்க
வந்த வேலையைவிட்டு பிச்சை போடவா முடியும்
செருப்பைத்தான் இங்க விடுகிறேனே
காசையும் ஏன் இப்பவே கேட்கிறான்
அதுவும் எழுதியிருப்பதை விட அதிகமாக
சீட்டு வாங்கி செல்லும்படி ஒரு பதாகை
இங்கு எல்லாத்துக்கும் ஒரு விலை
அவனுக்கு மட்டும் ஏன் மாலை போடுறான்
எனக்கு ஒரு பூ கூட தரவில்லை
எல்லாம் பதவியும் வசதியும் செய்யும் வேலை
அவளை திரும்பி திரும்பி பார்த்தேன்
அந்த சாதிக்கு மட்டும் எப்படி இப்படி அழகு
அவள் கூட வந்தவன் ஏன் இப்படி பட்டுகிட்டே நடக்கிறான்
அவன்கையில் இருக்கும் குழந்தை விளையாடிகிட்டே இருக்கு
இப்படியா வளர்ப்பாங்க பெத்துக்கமட்டும்தான் தெரியும்போல
தாயார் அலங்காரம் அருமை என்றாள்
இதுக்கா கோவிலுக்கு வந்தாய் என்றேன்
புறா பூனை எல்லாம் ஏன் இங்கே கொல்லாமல் விட்டாங்க
வெளிய வரும்போது பிச்சைபோட்டால் புண்ணியம் போகுமாம்
நிம்மதியா சாமிகும்பிட முடியுதா இங்க
வீட்டுக்கு வந்து யோசிச்சு பார்த்தால்
சிலையாக இறைவன் சிரித்த மாதிரி நினைவு
என்னைப் பார்த்து சிரித்திருப்பானோ
கோவிலுக்கு வந்தும் கடவுளை அனுபவிக்காமல் போனதற்கா
உலகத்துக்கு வந்தும் வாழ்வை அனுபவிக்காமல் போவதற்கா
என்னைப் பாத்து சிரிச்சா அவனேல்லாம் ஒரு கடவுளா
கடவுளே இல்லன்னு அறிவாளி மாதிரி ஒருத்தன் சொன்னான்
நான் எப்பவுமே சரி
நான் எப்பவுமே சரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக