சனி, 23 பிப்ரவரி, 2013

இறைபோதை


ஒளித்திருக்கும் இருளினை உன் ஒளி கொண்டு மறைப்பேனோ
உறைந்திருக்கும் மனதினை உன்கருணை கொண்டு கறைப்பேனோ
உள்ளிருக்கும் அசுரர்களை உன்பலம் கொண்டு அழிப்பேனோ
மாறாக முன்னிருக்கும் உலகை இறைபோதை கொண்டு  மறப்பேனோ

அன்பு கருணை மறந்து இங்கு ஆடவைக்கும் இறைபோதை
அண்டிவரும் உயிர்களையும் அழிக்கவைக்கும் இறைபோதை
என்வழிதான் உயர்ந்ததென்று எண்ணவைக்கும் இறைபோதை
உன்னைமறந்து உன்பெயரால் உனையழிக்கும் இறைபோதை

மெய்யென்று பொய் சொல்லி ஊரை ஏய்க்கும் இறைபோதை
அமைதி அமைதி என்று சொல்லி இரைச்சலிடும் இறைபோதை
அன்பு அன்பு என்று சொல்லி மனிதம் அழிக்கும் இறைபோதை
உந்தன் வழி என்று சொல்லி நரகம் காட்டும் இறைபோதை

இதுவுமில்லை அது எதுவுமில்லை  என்று சொல்லும் இறைபோதை
எதை செய்தும் இறைந்தால்  போதும் என்று சொல்லும் இறைபோதை
உன் இன்னொரு முகத்தை  வெட்டிப்போடு என்று சொல்லும்  இறைபோதை
இறைபோதையிடமிருந்து என்னை காக்க இறைஞ்சுகிறேன் உன்னையே  

புதன், 20 பிப்ரவரி, 2013

கலைந்த தவம்


ஒற்றைச் சொல்லிலே ஒடுக்குமொரு தவம்
ஓய்வின்றி நானும் செய்து வந்தேன்
பெரும் சிரிப்பால் என் தவம் கலைத்தாய்
பேரண்ட ரகசியங்கள் பல சொன்னாய்

மனக்காட்சி தேடி கண்மூடும் தவம்
மனதடக்க நானும் செய்து வந்தேன்
மின்னி கண்திறக்க என் தவம் கலைத்தாய்
மனதும் நிறையும் காட்சி தந்தாய்

மாயாதத்துவம் படித்து புரியும் தவம்
மனம் குழப்பி நானும் செய்து வந்தேன்
ஒற்றைக் கேள்வியில் என் தவம் கலைத்தாய்
ஓய்வாக பதிலை தேட வைத்தாய்

தவம் கலைத்த உனக்கு சாபம் இடுவேனோ
தவம் கலைந்தது உன் வரமாக கொள்வேனோ
காட்டுவழி இனி கலங்காமல் செல்வேனோ
கண் திறந்த உன்னை குருவாக கொள்வேனோ

என் தவம் கலைத்து பின் நீ என்ன செய்கிறாய்
என்னுள்ளே அமைதியாய் தவம் செய்கிறாயோ
உன்தவம் கலைக்குமென் சொல் பார்வை எண்ணம்
உன்வழி உள்வழி மறைவழி நிறைவழி என்வழி


ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

தேடுகிறேன்


பல கணங்களாக
பல இடங்களிலே
தேடுகிறேன்
கணங்கள் யுகங்களாக
இடங்கள் உலகங்களாக

தீண்டிய தென்றலை
தோன்றிய காட்சியினை 
தேடுகிறேன்
தென்றலே நினைவாக
காட்சியே வரமாக

கண்டு மறந்த கண்களை
கலங்கி  தெரிந்த நிலவினை
தேடுகிறேன்
கண்களே புதிராக
நிலவே கவிதையாக

அந்தக்கணத்தில் பிறந்தேனா
தொலைந்தேனா தொலைத்தேனா
அந்த இடத்தில் இறந்தேனா
தேடினேனே தேடினாரே 

தென்றலும் நானும் நகர
தீண்டியதா தீண்டினேனா
காட்சியின் அரங்கேற்றம்
அண்டத்திலா பிண்டத்திலா

புதிரின்றும் புதிர்தானா
என்றுமே விளங்காதா
கவிதையே கேள்வியாக
கவிதையே பதில்தர