வியாழன், 29 செப்டம்பர், 2011

அறியும் மெய்



இத்தனை பேர் இங்கெதற்கு 
ஏன் இந்த கூச்சல் குழப்பம் 

பதிலில்லா கேள்விகள் அசைபட 
பதிவான நிகழ்வுகள் அரைபட 

வார்த்தைக்கொரு உணர்வு வெளிப்பட
வாழ்க்கை முன்னும்பின்னும் அலைந்திட 

கனவுகள் நிறைந்த அந்த இன்பக்காலம் 
கடவுளை வேண்டல் மட்டும் துன்பக்காலம் 

ஆயத்தங்களையும் பாவனைகளையும் 
வாழ்வு என்றே மனம் ஏற்கிறது 

காலைக்குள் மாற்ற ஒன்றுமில்லை 
கண்மூடி கிடந்தாலும் தூக்கமில்லை 

தாகமோவென தண்ணீர் குடித்து 
சந்தேகத்திற்கு மீண்டும் கழித்து 

அசையாது பிணம்போல கிடந்து பார்த்து 
ஐம்பதிலிருந்து ஒன்று எண்ணிப்பார்த்து 

தள்ளி குப்பற மல்லாக்க சாய்ந்து 
தலையணை தலைகால் இடம் மாற்றி 

ஆயத்தங்களையும் பாவனைகளையும் 
தூக்கம் என்று உடல் ஏற்பதில்லை 

சனி, 24 செப்டம்பர், 2011

எப்பவுமே இப்படித்தான்


நினைவு தெரிஞ்சபோதிருந்து இருக்குது 
நினைப்பெல்லாம் அதுவேதான் நடத்துது 
போற இடம் தெரியாம போகுது 
பயணமுன்னு தெரியாம நடக்குது 

புதுப்பாதை பார்த்தாலே வியக்குது 
பழையபாதை மாறாம நடக்குது 
போகும்போது விளக்குகளை பார்க்குது 
பாதையிலே வெளிச்சமில்லை தவிக்குது 

விழும்போது பறப்பதாக நினைக்குது 
விழாட்டியும் வலிப்பதாக சொல்லுது 
வழிகாட்டி எங்கேன்னு தேடுது 
வழிகாட்டி நானேன்னும் சொல்லுது 

எவர்வந்து சொன்னாலும் வாங்குது 
எதுக்குன்னு தெரியாம குழம்புது 
நல்லதுன்னு பார்த்ததுமே சொல்லுது 
நின்னு பார்த்து தப்புன்னும் சொல்லுது 

கொஞ்சினால் குழந்தையாக ஆகுது 
கொஞ்சும்போது தாயாக மாறுது 
கரையும்போது கண்ணீரை தள்ளுது 
கல்லாகி கொல்லவும்தான் செய்யுது 

இல்லாம போகணுன்னு நினைக்குது 
இல்லாமை இல்லேன்னும் சொல்லுது 
முழுசாக போகாம கொஞ்சம் நின்னு 
மிச்சமா தவிக்குமோன்னு தயங்குது 

பள்ளத்திலே நிக்குதுன்னு பதறுது 
பரபரன்னு சுத்திமுத்தி பார்க்குது 
கூட்டத்திலே தனியாத்தான் போகுது 
கீழெதுமேலெது தலைகீழ் மரத்திலே 

வியாழன், 22 செப்டம்பர், 2011

உன் இடத்தில் உன் கவிதை



கவிதை வழிந்த காகிதம்
காதல் மொழிந்த கவிதை
மனம் எழுந்த காதல்
மாலை விழுந்த மனம்
உடன் கழிந்த மாலை

கண்ணில் காட்டிய காதல்
கண்ணில் தெரிந்த நான்
கண்ணாடி காட்டாத மெருகு
கண்ணாடி பார்க்காத முருகு
கண்சாய்ப்பு பார்த்த நினைவு

தேடல் எல்லாம் நின்றது
ஊடல் சுகமாய் நின்றது
கூடல் மனதில் நின்றது
சாடல் சுற்றி நின்றது
வாடல் பிரிவில் நின்றது

கடன் நம்மை பிரித்ததே
கடல் நம்மை பிரித்ததே
பணம் நம்மை பிரித்ததே
வேலை நம்மை பிரித்ததே
விதி நம்மை பிரித்ததே

இரவு முழுதும் தூக்கமில்லை
போர்வை வாசம் இழக்கவில்லை
பகலில் கூட எழுவதில்லை
நட்பு இப்போ பழக்கமில்லை
அன்னை ஊட்டல் ருசிக்கவில்லை

நித்தம் கையில் காகிதம்
வரமாய் வந்த காகிதம்
வியர்வை பட்ட காகிதம்
கண்ணீர் விழுந்த காகிதம்
காதல் மொழிந்த காகிதம்

வியாழன், 15 செப்டம்பர், 2011

உடையும் நான்

சத்தமாக அழுதுகொண்டிருந்தது 
தாயின் கையிலிருந்த குழந்தை 
புன்னகையுடன் கொஞ்சும் தாய் 
புன்னகை பூக்குது எனக்கும் 
யாருடனோ புன்னகை பகிர்வதை 
யாரது தடுப்பது உள்ளிருந்து 

கதறி அழுதுகொண்டிருந்தது 
கையில் குழந்தையுடன் தாய் 
விறைத்துக் கொண்டிருக்கும் குழந்தை 
விளிம்பில் நிற்கும் என் கண்ணீர் 
யாருடனோ கண்ணீர் பகிர்வதை 
யாரது தடுப்பது உள்ளிருந்து 

கண்ணெதிரே சுகதுக்கம் பார்த்தால் 
கண்ணீரோடு பகிரசொல்வதா 
ஊர்முன்னே உணர்ச்சியின்றி உயரே 
உடையாது நிற்க வைப்பதா
இரண்டுமே நான்தானா 
இறுதியில் எதுதான் நான் 

இன்றும் காட்சி நிற்கிறது 
ஏழாம் மாதம் அவசரமாய் வந்துபோன 
ஒருமகனை கையிலேந்தி 
உடையாது நின்றிருந்தேன் 
மண்ணில் புதைக்குமுன்னே 
முதல்முத்தம் தரும்வரையில் 

திங்கள், 5 செப்டம்பர், 2011

காதல் விபாசனா

மூச்சையும் இதயத் துடிப்பையும்
கவனித்து நான் படுத்திருக்க

திரும்பிப் படுக்கவேண்டி
தூக்கத்திலும் கவனமாய் எனை நகர்த்த
நான் கண் திறந்து பார்க்க
கலைத்தேனோ தூக்கம் என நீ கேட்க
கலைந்தது தியானமென நான் சொல்ல
குழப்பமும் கலந்து நீ பார்க்க

மூச்சை கவனிப்பதொரு தியானதந்திரா
புத்தமதத்தில் அதன்பெயர் விபாசனா
காலையில் சொல்லவென மனதில் குறித்து

என்மூச்சும் துடிப்பும் கேட்க உனைத்திருப்பி
உள்ளங்கை காதும் விரல்நுனி கண்மூடும்
முத்திரை நான் பிடிக்க நீ மீண்டும் உறங்க

உயிரில் உயிர் கலந்ததென்ற
உன் மூச்சை கவனிப்பதே
நான் செய்யும் தவமாகும்