வியாழன், 15 செப்டம்பர், 2011

உடையும் நான்

சத்தமாக அழுதுகொண்டிருந்தது 
தாயின் கையிலிருந்த குழந்தை 
புன்னகையுடன் கொஞ்சும் தாய் 
புன்னகை பூக்குது எனக்கும் 
யாருடனோ புன்னகை பகிர்வதை 
யாரது தடுப்பது உள்ளிருந்து 

கதறி அழுதுகொண்டிருந்தது 
கையில் குழந்தையுடன் தாய் 
விறைத்துக் கொண்டிருக்கும் குழந்தை 
விளிம்பில் நிற்கும் என் கண்ணீர் 
யாருடனோ கண்ணீர் பகிர்வதை 
யாரது தடுப்பது உள்ளிருந்து 

கண்ணெதிரே சுகதுக்கம் பார்த்தால் 
கண்ணீரோடு பகிரசொல்வதா 
ஊர்முன்னே உணர்ச்சியின்றி உயரே 
உடையாது நிற்க வைப்பதா
இரண்டுமே நான்தானா 
இறுதியில் எதுதான் நான் 

இன்றும் காட்சி நிற்கிறது 
ஏழாம் மாதம் அவசரமாய் வந்துபோன 
ஒருமகனை கையிலேந்தி 
உடையாது நின்றிருந்தேன் 
மண்ணில் புதைக்குமுன்னே 
முதல்முத்தம் தரும்வரையில் 

கருத்துகள் இல்லை: