இத்தனை பேர் இங்கெதற்கு
ஏன் இந்த கூச்சல் குழப்பம்
பதிலில்லா கேள்விகள் அசைபட
பதிவான நிகழ்வுகள் அரைபட
வார்த்தைக்கொரு உணர்வு வெளிப்பட
வாழ்க்கை முன்னும்பின்னும் அலைந்திட
கனவுகள் நிறைந்த அந்த இன்பக்காலம்
கடவுளை வேண்டல் மட்டும் துன்பக்காலம்
ஆயத்தங்களையும் பாவனைகளையும்
வாழ்வு என்றே மனம் ஏற்கிறது
காலைக்குள் மாற்ற ஒன்றுமில்லை
கண்மூடி கிடந்தாலும் தூக்கமில்லை
தாகமோவென தண்ணீர் குடித்து
சந்தேகத்திற்கு மீண்டும் கழித்து
அசையாது பிணம்போல கிடந்து பார்த்து
ஐம்பதிலிருந்து ஒன்று எண்ணிப்பார்த்து
தள்ளி குப்பற மல்லாக்க சாய்ந்து
தலையணை தலைகால் இடம் மாற்றி
ஆயத்தங்களையும் பாவனைகளையும்
தூக்கம் என்று உடல் ஏற்பதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக