ஒற்றைச் சொல்லிலே ஒடுக்குமொரு தவம்
ஓய்வின்றி நானும் செய்து வந்தேன்
பெரும் சிரிப்பால் என் தவம் கலைத்தாய்
பேரண்ட ரகசியங்கள் பல சொன்னாய்
மனக்காட்சி தேடி கண்மூடும் தவம்
மனதடக்க நானும் செய்து வந்தேன்
மின்னி கண்திறக்க என் தவம் கலைத்தாய்
மனதும் நிறையும் காட்சி தந்தாய்
மாயாதத்துவம் படித்து புரியும் தவம்
மனம் குழப்பி நானும் செய்து வந்தேன்
ஒற்றைக் கேள்வியில் என் தவம் கலைத்தாய்
ஓய்வாக பதிலை தேட வைத்தாய்
தவம் கலைத்த உனக்கு சாபம் இடுவேனோ
தவம் கலைந்தது உன் வரமாக கொள்வேனோ
காட்டுவழி இனி கலங்காமல் செல்வேனோ
கண் திறந்த உன்னை குருவாக கொள்வேனோ
என் தவம் கலைத்து பின் நீ என்ன செய்கிறாய்
என்னுள்ளே அமைதியாய் தவம் செய்கிறாயோ
உன்தவம் கலைக்குமென் சொல் பார்வை எண்ணம்
உன்வழி உள்வழி மறைவழி நிறைவழி என்வழி

1 கருத்து:
/// மறைவழி நிறைவழி என்வழி ///
நல்ல வழி...
கருத்துரையிடுக