ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

காட்சி தா

எல்லாம் ஒன்றென நூல்கள் சொல்லும்
என்றும் எனதென அறிவும் சொல்லும்
எல்லாம் நீயென  இதயம் சொல்லும்
என்றும் காட்சிக்கு மனமோ ஏங்கும்

என்மீது விழும்போது மழையாகிறாய்
என்பாதம் ரசித்திடும் பனியாகிறாய்
இமைமீறி தெரிந்திடும் ஓளியாகிறாய்
என்கண்கள் தேடிடும் மீனாகிறாய்

என்னிருளை விரட்டிவிடும் விளக்காகினாய்
என்விளக்கில் எரிகின்ற நெய்யாகினாய்
என் நெய்யை எரிக்கின்ற திரியாகினாய்
என்திரியை தூண்டிவிடும் விரலாகினாய்

என்மனதில் எப்போதும் உன் நினைவானது
என்னிதயம் எப்போதும் உன் இடமானது
என்பயணம் எப்போதும் உன் வழியானது
என்விழியில் எழுந்தருள் ஊர்வலத்திலாவது


கருத்துகள் இல்லை: